Desikan

  • Back to Main page

Sunday, 26.11.06

பொடிடப்பா - புஷ்பா ராகவன்

இவர் எழுத ஆரம்பித்த போது இவருக்கு வயது 56. தற்போது இவருக்கு வயது 58! இவர் கதைகள் பாக்கியா, குமுதம், சிநேகிதி, ராணி nilacharal.com போன்ற பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இவர் எழுதிய நாவல் பெண்மணி மாத இதழில் வந்துள்ளது. இவரது சிறுகதைகளை இவரே வானொலியில் வாசித்துக்காட்டியுள்ளார்.  'குழந்தை தொழிலாளர்கள்' பற்றி இவர் எழுதிய கதைக்கு தமிழக அரசு இரண்டாம் பரிசு கொடுத்து கவுரவித்துள்ளது. கர்னாடக சங்கீதம் பிடித்த இவருக்கு எழுத எல்லா ஊக்கமும் தந்தவர் இவர் கணவர் ராகவன். இவ்வளவு எழுதும் திருமதி புஷ்பா ராகவ்ன் படித்தது 8ஆம் பகுப்பு மட்டுமே.

இந்த பதிவில் தன் 'nostalgia' நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...

 

 

( தொடர்ந்து என் வலைப்பதிவில் எழுதுவார் என்று எண்ணுகிறேன்)

[read more]

Friday, 16.06.06

பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை -

பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் 'பட்டக்காரர் சப்ளை'.

பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் வந்திருக்கவில்லை#. கவுண்டர் சமூகத்தைச்சேர்ந்த பிள்ளைகள் சிலர் பட்டக்காரர் வீட்டிலேயே தங்கி ஹைஸ்கூலில் படித்தார்கள்.

பட்டக்காரரின் ஒரே மகன் தாராபுரம் ஹைஸ்கூலில் படித்துவந்தவன், சில ஆண்டுகளுக்கு முன் (1930களில்) தவறிவிட்டான். இது நடந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், பட்டக்காரர் அந்தப் பையனின் ஞாபகர்த்தமாக அவனுடைய பிறந்த நாளில் பள்ளி மாணவ, மாணவியர்க்குத் தின்பண்டங்கள் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்று காலையில் பியூன் வெங்கட்டப்பன் எல்லா வகுப்புகளுக்கும் ஒரு சர்குலர் கொண்டு வருவான். பிற்பகல் இரண்டாவது பீரியடில் பட்டக்காரர் சப்ளை இருக்கும் என்றும் அதற்குப் பிறகு பள்ளிக்கூடம் இருக்காது என்றும் அதில் கண்டிருக்கும். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு முதல் பீரியடு(2.15 லிருந்து 3 மணி) சுமாராக நடக்கும். அப்போதே பையன்களின் மனதெல்லாம் எதிர்பார்ப்பில் லயித்து இருக்கும்.

இரண்டாவது பீரியடு தொடங்கினவுடனே சாரதா விலாஸ் ஹோட்டல் ஆட்கள் கூடை கூடையாக இனிப்புகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொரு கிளாஸாக வருவார்கள். அடுத்த வகுப்பிற்கு அவர்கள் வந்தது தெரிந்தவுடனே எங்கள் கிளாஸிலும் கசமுசவென்று சத்தம் தொடங்கிவிடும். இந்த ஒருநாள், வாத்தியார்களும் அதற்க்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். அடுத்தது கூடைகள் எங்கள் வகுப்புக்கும் வந்து விடும். ஆசிரியருக்கு முன்பக்கத்தில் கூடைகளை வைத்துக்கொண்டு ஹோட்டல்காரர்கள் ஒவ்வொரு பையனுக்கும் ஒரு லட்டு, ஒரு ஜாங்கிரி, ஒரு மைசூர்பாகு, தவிர பக்கோடா, காராபூந்தி இத்தனையும் விநியோகிப்பார்கள். அவற்றை வாங்கிக்கொண்டு குழந்தைகள் தலை கால் புரியாத சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடுவார்கள். வாத்தியார்களுக்கும் உண்டென்பதால் அவர்களுக்கும் சந்தோஷமே. பட்டக்காரர் இருந்தவரை வருடா வருடம் இதை சிரத்தையுடன் செவ்வனே செய்து நூற்றுக்கணக்கான பிஞ்சு உள்ளங்களில் உவகையை வரவழைத்து வந்தார். துரதிர்ஷ்டவசமாக (1952 ல் என்று நினைக்கிறேன்) ,பட்டக்காரர் ஒரு முறை பழனி மலைக்குப் போய் பிராகாரத்தை வலம் வந்து கொண்டிருக்கையில் அவருடைய எதிரிகள் யாரோ திடீரென்று அவரை மறித்துக் கத்தியால் வெட்டி விட்டார்கள். அவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்தார். அத்துடன் 'பட்டக்காரர் சப்ளை'யும் நின்று போனது.


# வங்காளத்தில் இதனாலேயே கல்கத்தா பூதாகரமாக வளர, மீதி வங்காளம் முழுவதிலும் கோவை, மதுரை போன்ற பட்டணங்கள் வளரவில்லை.

எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள்

மொட்டைக் கடுதாசி
ஐஸூக்கு வந்த மவுஸ்!
உடைந்த கையை ஒட்டின கதை
கல்யாண ஊர்வலம்
பணம் காசின் பரிணாமம்
எண்ணெய்க் குளிப் படலம்
ரயில் பிரயாணத்தின் கதை - ரயில் பயணங்களில்
அது அந்தக் காலம்

Sunday, 11.06.06

எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் - 0 1

கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்" என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  முதலில் 'மொட்டைக் கடுதாசி'

[read more]

Wednesday, 15.02.06

நேர்மை

சமிபத்தில் படித்த நல்ல பதிவு நண்பர் பிரதீப் எழுதியது.தலைப்பு நேர்மை. இதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்ததா என்று தெரியவில்லை. இதை இங்கு பிரசுரிக்கிறேன். அனுமதி தந்த பிரதீபுக்கு நன்றி. இப்போது கூட லேட் இல்லை நாம் மாறலாம்.

Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். அப்படி ஒரு 12 மாதத்திற்கான குப்பையையும் அள்ளி ஆபிஸில் சமர்ப்பித்து விட்டால் போதும், கொஞ்சம் வரியை விலக்கி விடலாம். இந்த மாதிரி நாடகங்களில் நடித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் அது கமலஹாசனையோ, ஓம்பூரியையோ சிவகாசி, ஆதி போன்ற படங்களில் நடிக்க வைத்தால் அவர்களுக்கு எப்படிக் கசக்குமோ அதே கசப்புணர்ச்சியுடன் தான் நடித்தேன்..அதற்காக இன்றும் வருந்துகிறேன். இன்னும் வருந்துவேன். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று என்னை நீங்கள் வியப்பாய் பார்ப்பது எனக்குப் புரிகிறது...
என் அலுவலகத்தில் அவர்கள் இந்த அத்தாட்சிகளை சமர்ப்பிக்க சொன்ன விதம் இந்த மாதிரி சால்ஜாப்புகளை கொஞ்சம் குறைக்கும் போலிருக்கிறது. HRA விலும், Medical Bill லும் வரி விலக்கு வேண்டுபவர்கள் செய்ய வேண்டியவை:

 

[read more]

Wednesday, 21.09.05

கல்யாண ஊர்வலம்

கல்யாண ஊர்வலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

கல்யாண ஊர்வலம்-1

ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் கல்யாண ஊர்வலம் என்று ஒரு கண்கொள்ளாக் காட்சி அடிக் கடி காணக் கிடைத்தது, ஆடி மாதம், மார்கழி மாதம் போன்ற சில காலங்களைத் தவிர. கல்யா ணத்துக்கு முன் தினம் ‘மாப் பிள்ளை அழைப்பை’ (ஜான வாசம் என்றும் சொல்வதுண்டு) ஒட்டி மாப்பிள்ளையைத் திறந்த காரில்1  உட்கார வைத்து ஊர்வலமாக (வழக்குச் சொல்லில் இது சில சம யம் ‘ஊர்கோல’மாகவும் திரிந்தது) அழைத்துச் செல்வார்கள்.

நன்றாக இருட்டின பின்னர் தான் ஊர்வலம் நடைபெறும். பெண்கள் கலர்கலரான பட்டுப் புடவைகள் சரசரக்க, அவற்றின் ஜரிகையானது கியாஸ் விளக்கின் ஒளியில் பளபளக்க, மல்லிகைப் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு காருக்குப் பின் நடப்பார் கள். கார் இரண்டாவது கியரில் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண் டிருக்கும். முன்னாலும் பின்னாலும் கியாஸ் விளக்குகளைச் சுமக்க முடி யாமல் சுமந்துகொண்டு கூலிக்காரர் கள் நடப்பார்கள். அது ஒரு பெரிய சைஸ் பெட்ரோமாக்ஸ் விளக்கே. மிகவும் பிரகாசமான ஒளியையும் மண்ணெண்ணை மணத்தையும் ஒருங்கே பரப்பிக்கொண்டிருக்கும். ஆனால் அந்த மண்ணெண்ணை வாசம் மல்லிகை மணத்தோடு இழைந்து சுகந்தமான ஒரு நறு மணமாகவே தோன்றும். அந்த வாசனை இல்லாமல் கல்யாண ஊர்வலங்கள் பரிமளிக்க முடியாது.

அந்தக் காலத்தில் கார் என்பது அபூர்வமான வஸ்து. பல குழந்தை கள் காரிலே ஏறியிருந்திருக்கக்கூட மாட்டார்கள். அதனால் ஊர்வலத்துக்குக் கார் வந்து நின்ற உடனேயே, கல்யாணத்துக்கு வந்த குழந்தைகள், முக்கியமாக மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள்  காணாதது கண்ட மாதிரி ஓடி வந்து அதை ஆக்கிரமித் துக்கொள்வார்கள். அப்புறம் மாப் பிள்ளை வரும்பொழுது அவருக்கு பின் ஸீட்டில் எப்படியோ இடம் பண்ணிக் கொடுப்பார்கள். ஊர் வலம் தொடங்கும்போது அவருக்கு இரண்டு பக்கமும் உறவின வாண்டு கள் பெருமை தலைகொள்ளாமல் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும். முன் ஸீட்டில் டிரைவரின் நிலை நெருக்கடி நிலை தான். பரம்பரை பாத்தியதை என் பது போல இது விஷயத்தில் குழந்தைகளுக்கு ஒரு உரிமை இருந்தது. தீபாவளிக்குப் பட்டாஸ் மாதிரி இந்தக் குழந்தைப் பட்டா ளம் இல்லாது மாப்பிள்ளை ஊர் வலம் கிடையாது; சோபிக்கவும் சோபிக்காது.

கல்யாண ஊர்வலம்-2

சாதாரணமாக மாப்பிள்ளை வெளியூர்க்காரராக இருப்பார் என் பதால் அவர் எப்படி இருக்கிறார் என்ற ஆவல் ஊர்க்காரர்கள் எல் லோருக்கும் உண்டு. ஆகவே ஊர் வலம் போகும் வீதிகளில் எல்லோர் வீட்டு வாசற்படிகளும் நிறைந்து காணப்படும்.
முதல் நாள் ஊர்வலத்தில் மாப்பிள்ளை மட்டும்தான் என்றால் அடுத்த நாள் திருமணம் ஆன பிறகு ராத்திரி ஊர்வலம் இன்னும் வெகு ஜோராக இருக்கும். இதில் பெண் மாப்பிள்ளை இருவரும் ஜோடியாக அமர்ந்திருப்பார்கள். அநேகமாக அதே காராகத்தான் இருக்கும். புஷ்ப அலங்காரங்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கக்கூடும். ஊர் வலத்துடன் போகும் கூட்டம், வேடிக்கை பார்த்து நிற்கும் கும்பல் இரண்டுமே இன்று கூடுதலாக இருக்கும். “நல்ல ஜோடிப் பொருத் தம்” என்று மகிழ்பவர்களையும் மனதார வாழ்த்துபவர்களையும் தவிர பார்த்து வயிறு எரிபவர்களும் ஊர்க்காரர் கூட்டத்தில் இருப்பர். கல்யாண விருந்தினாலோ அலைச்ச லினாலோ அடுத்த நாள் மணமக்க ளில் யாருக்காவது உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டால் “பொல்லாதவர் களின் கண்கள்தாம் காரணம்” என்று சொல்லப்படுவது வழக்கமா யிருந்தது.

நாற்பதுகளுக்கும் முந்தின காலத்தில் ஊர்வலத்திற்காக சாரட்டு வண்டிகளும் நிறைய இருந் திருக்க வேண்டும். சில ஊர்களில் இன்னும் கொஞ்சம் பாக்கி இருந் தன. 1950ல் திண்டுக்கல்லில் ஒரு திருமணத்திற்குப் போயிருந்தேன். பெண்ணின் தந்தையால் “விசாரித் துக் கொண்டு வா” என்று அனுப் பப்பட்டவர் திரும்பி வந்து, “கார் 30 ரூபாய், சாரட்டு (அலங்காரக் குதிரை வண்டி) 12 ரூபாயாம்” என்று ரிப்போர்ட் கொடுத்தார். காதைத் தீட்டிக்கொண்டு ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த நான் ‘அழகான சாரட்டை விட்டுவிட்டுக் கூடப் பணமும் கொடுத்து ஓட் டைக் கார் யாராவது வைப்பார் களா’ என்று எண்ணினேன். எங்கள் ஊரில் சாரட்டு கிடையாது. நான் சாரட்டு ஊர்வலத்தைப் பார்த்த தில்லை. ஆகையால் என் சொந்த நலனும் இதில் கலந்திருந்தது என்னவோ உண்மை. பெண்ணைப் பெற்ற தகப்பனார் பிசினஸ் கொஞ்சம் நொடித்துப் போய் பண முடையில் இருந்தார் என்றும் நான் கேள்விப்பட்டிருந்ததனால் பதி னெட்டு ரூபாயை மிச்சம் பண்ணி ராஜாராணி காலம் போல் சாரட்டை ஏற்படுத்துவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தேன். இரண்டு நிமிஷம் யோசனை செய்த வர் “சரி, காரே இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டார். எனக்குத் தலை யில் இடி விழுந்தாற் போலிருந்தது. என்ன செய்வது? அன்று நான் இழந்த சாரட்டு ஊர்வலம் காணும் பாக்கியம் அப்புறம் என்றுமே வாய்க் கவில்லை. மத்திய அறுபதுகளில் நடந்த என் கல்யாணத்துக்கு சாரட்டு வர ‘சான்ஸ்’ உண்டா என்று ஜாடைமாடையாக, ஆனால் ரொம்ப நம்பிக்கையில்லாமல்தான் விசாரித்துப் பார்த்தேன். சாரட்டு என்பது சரித்திரம் ஆகிவிட்டது என்று தெரிய வந்தது.

ஊர்வலத்தைப் பற்றிய கதையை ‘மாப்பிள்ளை டிரஸ்’ பற்றி இரண் டொரு வார்த்தைகள் சொல்லாமல் முடிக்க முடியாது. மாப்பிள்ளை அழைப்பு என்றால் கோட்டு, ஸ¨ட்டு, டை (எல்லாம் மாப்பிள் ளைக்கு மாமனாரின் உபயம்) இன்றி யமையாத அயிட்டங்கள். அவற்றை அணிந்துதான் மாப்பிள்ளை முறுக்குடன் பவனி வருவார். சில மாப்பிள்ளைகளுக்கு ஸ¨ட்டும் ‘டை’யும் அணிவது முதல் தடவை யாகவே இருக்கும்.2 பலருக்கும் தெரிந்தவர் யாராவது டை கட்டி விடுவார்கள். அந்தக் காலத்தில் டெரிலீன் டெரிவுல் போன்ற துணி கள் கிடையாது. கசங்காமல் இருக்க வேண்டும் என்றால் உல்லனே உத்த மம். ஸ¨ட் என்பது ‘ஆயுள் பரியந் தம்’ (ஆயுள் முழுவதும்) வைத்துக் கொள்ள வேண்டியதாகவும் கருதப் பட்டது. அதனால் பெரும்பாலும் ‘மாப்பிள்ளை டிரஸ்’ கம்பளி ஆடையால்தான் தைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சீதோஷ்ணத்துக்கு அவ்வளவு ஏற்புடையதில்லைதான். அதுவும் கல்யாணம் சித்திரை மாதத்தில் இருந்தால், மாப்பிள்ளை யானவர் குழந்தைகளின் கும்பலின் நடுவே வியர்க்க வியர்க்க உட்கார்ந் திருப்பது காண்போர் மனத்தைக் கரைக்கக்கூடியதொரு காட்சி.

_________________________________________________________________________________
(1. அதாவது டூரர் டாப் என்ற, கேன்வாஸ் துணியால் ஆன கூரையைக் கொண்ட வண்டி. பழைய மாடல்களில் சகஜமாகக் காணப்பட்ட இது பிற்காலத்தில் ஏனோ அருகிப்போயிற்று. நாற்பதுகளில் இருந்தே வெளிவருவது அபூர்வமாயிற்று. வெயிலையும் வெப்பத்தையும் இன்றைய கார்களை விட அது நன்றாகவே சமாளித்தது என்று தோன்றுகிறது.

2. இதற்கும் முந்தின காலத்தில் கோட்டு அணிவது பரவலாக இருந்திருக்கிறது. ஆனால் ஸ¨ட் அபூர்வம். நாற்பதுகளில் இருந்து கோட்டும் மிகக் குறைந்துவிட்டது.)

நன்றி: உயிர்மை

எஸ்.வி.ராமகிருஷ்ணனின் மற்ற கட்டுரைகள்

Older articles:

19.09.2005

10.03.2005

25.11.2004

09.09.2004

02.08.2004

14.07.2004

19.06.2004

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தேன்கூடு.காம்
Back to Main page